புதுடெல்லி: நீட் (NEET-UG) பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மாணவர்களின் கடின உழைப்பையும் கனவுகளையும் சிதைப்பதில் பிரதமர் மோடி கூட்டுச் சேர்ந்துள்ளதாக அவர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் “நீட் தேர்வைப் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்” என்று தெரிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தி இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.
ராகுல் காந்தியின் எக்ஸ் (X) பதிவு: மத்திய அரசின் கூற்றிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், “பிரதமர் மோடி நீட் தேர்வு வினாத்தாள் கசிவையும் தனிப்பட்ட முறையில் தான் கண்காணித்திருப்பார் போல” என்று மிகக் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், “பாஜக ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் தொடர்ந்து ஏலத்திற்கு விடப்படுகிறது. சில பெற்றோர்கள் தங்களின் நகைகளை விற்றும், கடன்கள் வாங்கியும் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். ஆனால், அவர்களுக்குக் கிடைப்பதோ வினாத்தாள் கசிவும், தேர்வு ரத்து என்ற மன உளைச்சலும் தான். முறைகேடுகளுக்குக் காரணமான தேசிய தேர்வு முகமையின் (NTA) உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, உயர் பதவிகளை வழங்கிப் பாராட்டி வருகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரிக்கை: தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். முறைகேடுகளைத் தடுக்க முறையான, பாதுகாப்பான கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை காங்கிரஸ் கட்சி மாணவர்களுக்காகத் தொடர்ந்து போராடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களைப் பாதித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்தத் தொடர் தாக்குதல் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

