சென்னை: தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சியை விரைவுபடுத்தவும், திட்ட அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் நகர் ஊரமைப்பு இயக்குனரகம் (DTCP) சார்பில் ஸ்டேக் ஹோல்டர்கள் (பங்குதாரர்கள்) கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி நேரில் கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நீண்டகால நடைமுறைச் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய கொள்கைக் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு முன்வைத்தார்.
திட்ட அனுமதி நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்துதல், மாவட்ட அளவிலான அதிகாரப் பகிர்வை அதிகரித்தல், தேவையற்ற நிர்வாகத் தாமதங்களை நீக்குதல் மற்றும் உலகத் தரத்திற்கு இணையான வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குதல் ஆகிய உயரிய நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஹென்றி முன்வைத்த முக்கியக் கொள்கைக் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்:
1. நிலம் மற்றும் திட்ட அனுமதி உத்திகள்
- ஆவணச் சரிபார்ப்பு: திட்ட அனுமதி வழங்கும் போது திரும்பத் திரும்ப ஆவணங்கள் கோருவதைத் தவிர்த்து, ஒரே முறை ஆவணச் சரிபார்ப்பு (Single Verification) மூலம் விரைவான அனுமதி வழங்க வேண்டும்.
- ஒருங்கிணைந்த NOC: அனைத்து துறைகளின் தடையின்மைச் சான்றுகளையும் (NOC) அரசுத் தரப்பே ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பின் மூலம் தானாகப் பெற வேண்டும்.
- நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள்: திட்டமில்லா பகுதிகளில் உள்ள நஞ்சை நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் NOC பெறும் முறையை மாற்றி, DTCP ஆணையர் நிலையிலேயே வருவாய்த் துறை பதிவேடுகளின்படி விரைந்து முடிவெடுக்க வேண்டும். புஞ்சை நிலங்களுக்கு வேளாண் துறை இணை இயக்குநரின் NOC-க்கு விலக்கு அளித்து, VAO அடங்கல் அடிப்படையில் மாவட்ட DTCP இணை/துணை/உதவி இயக்குனர் அளவிலேயே அதிகாரம் வழங்க வேண்டும்.
- புதிய முழுமைத் திட்டங்கள் (Master Plan): நிலப் பயன்பாட்டு வகைப்பாட்டில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்து, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று, எதிர்கால வளர்ச்சியை முன்னறிவிக்கும் அறிவியல் பூர்வமான புதிய முழுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அணுகுச் சாலை விதிகள்: வரன்முறைச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற சாலைகள் மற்றும் பாரம்பரியப் பூர்வீகச் சாலைகளில் குறைந்தபட்சம் 6 மீட்டர் அணுகுச் சாலை இருந்தால், அங்குக் ரியல் எஸ்டேட் திட்டங்களை அனுமதிக்க வேண்டும்.
- TDR சலுகைகள்: சாலை விரிவாக்கம், உயர் மின் கோபுரங்கள் போன்ற அரசுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிலங்களை இலவசமாகப் பெறுவதற்குப் பதிலாக, அதற்குச் சமமான மாற்றுப் பரிமாற்ற வளர்ச்சி உரிமைகளை (TDR) வழங்க வேண்டும்.
2. கட்டிட விதிமுறைகள் மற்றும் OSR சலுகைகள்
- CRZ மற்றும் பழைய கட்டிடங்கள்: கடலோர பாதுகாப்பு மண்டல (CRZ) பகுதிகளில் 2019 அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 2 மற்றும் 3-வது தள கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
- CBA மற்றும் கல்வி நிறுவனங்கள்: தொடர் கட்டுமான பகுதி (Continuous Building Area) அனுமதிக்கான வரம்பை மக்கள் அடர்த்திக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். அனுமதியற்ற முறையில் உள்ள உள்ளாட்சி அனுமதி பெற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்குத் திட்ட மற்றும் திட்டமில்லா பகுதிகள் என அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான அனுமதி நடைமுறையை உருவாக்க வேண்டும்.
- OSR விலக்கு சமநிலை: CMDA பகுதிகளில் நடைமுறையில் உள்ள 3,000 சதுர மீட்டர் வரையிலான திறந்தவெளி நிலம் (OSR) கட்டண விலக்கு சலுகையை DTCP பகுதிகளுக்கும் நீட்டித்து, அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியான OSR சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
- சட்டச் சீரமைப்பு: பழைய கட்டிடங்கள் தொடர்பாகப் பொதுநல வழக்கு என்ற பெயரில் சமூக ஆர்வலர்களால் தொடரப்படும் இடிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க, அதற்கான காலவரம்பை நிர்ணயித்து உரிய சட்டச் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
3. டிஜிட்டல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்
- வல்லுநர்கள் குழு: Master Plan தயாரிப்புக் குழுக்களில் ரியல் எஸ்டேட், நகர திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப அனுபவம் கொண்ட வல்லுநர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
- உதவி மையம் மற்றும் வரன்முறை: DTCP தலைமை அலுவலகத்தில் அரசாணைகள் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்து வழிகாட்ட நிரந்தர உதவி மையம் அமைக்க வேண்டும். அனுமதியின்றி அல்லது விதிமீறி கட்டப்பட்டுள்ள அனைத்து வகையான கட்டிடங்களையும் வரன்முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.
- அதிகாரப் பகிர்வு: மாவட்ட அளவிலான DTCP அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி வழங்கும் அதிகார வரம்புகளை உயர்த்தி, கோப்புகள் தலைமை அலுவலகத்திற்குச் செல்லும் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
- போலி அனுமதித் தடுப்பு: சென்னை புறநகர்ப் பகுதிகளில் வரன்முறைச் சட்டத்தின் கீழ் நஞ்சை நிலங்களுக்கு உட்பிரிவு அனுமதி பெற்று சட்டவிரோதமாகப் போலி அனுமதிகள் பெறப்படுவதைத் தடுக்க DTCP உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தானியங்கி ஒப்புதல் (Deemed Approval): அனைத்து உட்பிரிவு (Subdivision) அனுமதிகளும் முழுமையாக இணையவழியில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சிகள் 30 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் வழங்கத் தவறினால், ‘Deemed Approval’ நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
4. பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்திகள்
- ஒற்றைப் பதிவு முறை: மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பொறியாளர்கள் DTCP, CMDA மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தனித்தனி பதிவு இன்றி, ஏதேனும் ஒன்றில் பதிவு செய்தாலே ஒட்டுமொத்தமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
- Setback மற்றும் சான்றிதழ் விதிகள்: 18.30 மீட்டர் உயரம் வரை உள்ள குடியிருப்பு, வணிக மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு ஒரே மாதிரியான Setback விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். Completion Certificate (CC) வழங்கும் போது வெளிப்புற அளவுகள் சரியாக இருந்தால், உள்புற மாற்றங்களைக் காரணம் காட்டி சான்றிதழ் மறுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- டிஜிட்டல் போர்டல் மேம்பாடுகள்: மேல்முறையீட்டு மனுக்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதி, Self Certification-க்கான மாதிரி வரைபடங்கள் (Model Drawings) பதிவிறக்க வசதி, மற்றும் ஆவணக் குறைபாடுகளை மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
- ஒருங்கிணைந்த கட்டண முறை: Single Window Portal-ல் QR Code, User ID, Credit/Debit Card மூலம் விண்ணப்பதாரரே நேரடியாகத் திட்ட அனுமதி கட்டணங்களைச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- சுய சான்றளிப்பு (Self Certification): Self Certification முறையின் வரம்புகளை உயர்த்தி, வரைபடங்களில் ஏற்படும் தவறுகளை விண்ணப்பத்தை நிராகரிக்காமல் திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான (Demolition) அனுமதியையும் இதன் அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.
- கூடுதல் கட்டுமானம்: ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் கூடுதல் கட்டுமானம் மேற்கொள்ளும்போது, புதியதாகக் கட்டப்படும் பகுதியின் பரப்பளவிற்கு மட்டுமே திட்ட அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும்.
- டிப்ளமோ பொறியாளர்கள் அங்கீகாரம்: வரன்முறை செய்யப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளில் தேவையான நிபந்தனைகளுடன் வணிகப் பயன்பாட்டையும் அனுமதிக்க வேண்டும். மேலும், Diploma Engineers மற்றும் Structural Engineers ஆகியோரின் தொழில்முறை பங்களிப்பை உரிய அளவில் அங்கீகரித்து அவர்களின் அதிகார வரம்புகளைத் தெளிவுபடுத்த வேண்டும்.
5. மனை வரன்முறை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI)
- மனை வரன்முறை நீட்டிப்பு: அனுமதியற்ற மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்தின் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும். அனுமதியற்ற மனைப் பிரிவுகளுக்கு அருகில் சுடுகாடு, ஆறு, குளம், குவாரி போன்ற காரணங்களால் விண்ணப்பங்களை மொத்தமாக நிராகரிக்காமல், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்.
- விளக்கக் காணொளிகள்: DTCP சட்டங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் குறித்துப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கக் காணொளிகளை வெளியிட வேண்டும். ஆன்லைன் நடைமுறைகளுக்கும் உள்ளாட்சி விதிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை நீக்கி, புதிய அரசாணைகளை Single Window Portal-ல் உடனுக்குடன் வெளியிட வேண்டும்.
- AI தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒருங்கிணைந்த அனுமதி முறைமையை உருவாக்கி, அனைத்து துறைகளின் தரவுகளையும் மனித தலையீடின்றி ஒருங்கிணைத்து, “ஒரே நாடு – ஒரே நிலம் – ஒரே அனுமதி” என்ற கொள்கை நோக்கில் உலகத் தர திட்ட அனுமதி அமைப்பை உருவாக்க வேண்டும்.
அதிகாரிகள் உறுதி மற்றும் நன்றி நவித்தல்:
FAIRA கூட்டமைப்பு சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் கனிவுடன் கேட்டறிந்த நகர் ஊரமைப்பு இயக்குனரக ஆணையர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப. அவர்கள், நடைமுறைக்கு உகந்த பரிந்துரைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவாக அமல்படுத்தவும், பிற துறைகளுடன் இணைந்து தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயற்சி எடுக்கப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
இதற்காக நகர் ஊரமைப்பு இயக்குனரக ஆணையர் அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. “விரைவான அனுமதி – வெளிப்படையான நிர்வாகம் – முதலீட்டிற்கு உகந்த சூழல்” என்ற உயரிய நோக்கில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக FAIRA நிர்வாகம் தெரிவித்துள்ளது.

