அரக்கோணம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர சார் பதிவாளர் நியமனம் செய்யப்பட்டதற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) நன்றி தெரிவித்துள்ளது. அதன் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த பாராட்டை பதிவு செய்துள்ளார்.

அரக்கோணம் அலுவலகம் மாநிலத்தின் முக்கியமான பதிவு மையங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் நிலையில், நாளொன்றுக்கு சுமார் 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு ஆவணப் பதிவுகள் நடைபெற்று வந்தன. ஆனால் நிரந்தர சார் பதிவாளர் இல்லாததால் அனுபவமற்ற பணியாளர்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், இதனால் பதிவு செயல்முறைகள் தாமதமாகியதுடன், பல ஆவணங்கள் ஏற்க மறுக்கும் நிலையும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் பல சிரமங்களுக்கு ஆளாகி வந்ததோடு, அரசின் வருவாயும் பாதிக்கப்பட்டதாக FAIRA குறிப்பிடுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அனுபவமிக்க நிரந்தர சார் பதிவாளரை நியமிக்க வேண்டுமென FAIRA சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தீர்வு அளித்ததற்காக மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளதாக டாக்டர் ஆ. ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version