செய்தி விவரம்:
தஞ்சாவூர் / சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் 11 விவசாயிகளுக்கு நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா விருது வழங்கி கெளரவித்துள்ளார்.
தனது ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ அறக்கட்டளை சார்பில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அவர், தேர்வு செய்யப்பட்ட 11 இயற்கை விவசாயிகளுக்கும் ‘நம்மாழ்வார் விருது’ மற்றும் தலா ரூ.5,000 ரொக்கப் பரிசினை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் நடிகர் சௌந்தரராஜா பேசியதாவது:
“இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது நமது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் முக்கியமான வாழ்க்கை முறை. மண்ணையும் விவசாயிகளையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். எதிர்காலத்திலும் நமது அறக்கட்டளை சார்பில் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.”
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் நடிகர் சௌந்தரராஜாவின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

