திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் அதீத பாதுகாப்புப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, சினிமாப் பாடலுக்கு ரீல்ஸ் (Reels) வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வடமாநில வாலிபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை: திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகம், எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மிக முக்கியப் பகுதியாகும். இந்த வளாகத்தின் உள்ளே புகுந்த வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த அரசு முத்திரையுடன் கூடிய பலகைகள் மற்றும் கலெக்டரின் முகாம் அலுவலக முகப்புப் பகுதி ஆகியவற்றைப் பின்னணியாக வைத்து, இந்தி சினிமாப் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அது சில மணி நேரங்களிலேயே இணையத்தில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

ஆட்சியர் அதிரடி உத்தரவு: பாதுகாப்பு நிறைந்த கலெக்டர் முகாம் அலுவலகத்திற்குள், அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி நுழைந்து வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, அரசு வளாகத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட அந்த வடமாநில வாலிபரைக் கண்டறிந்து, அவர் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகரக் காவல் ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை: ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, மாநகரக் சைபர் க்ரைம் போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் ஐபி (IP Address) முகவரியை வைத்து, திருச்சியில் தங்கி வேலை பார்த்து வரும் அந்த வடமாநில வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்ற வளாகங்களில் இது போன்ற ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதும், அதற்கு அரசு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version