ரியாத்:

உலகக் கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த சவூதி ப்ரோ லீக் (Saudi Pro League) கால்பந்து தொடரின் இறுதி கட்டத்தில், ‘டமாக் எஃப்சி’ (DAMAC FC) அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல்-நாசர் (Al-Nassr) அணி அதிகாரப்பூர்வமாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அல்-நாசர் அணியின் வீரர்கள், எதிரணியின் தடுப்பாட்டங்களை முறியடித்து அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து ஆட்டத்தை முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். டமாக் எஃப்சி அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.

ரொனால்டோவின் முதல் சவூதி லீக் மகுடம்:

கடந்த 2022-ஆம் ஆண்டு உலகின் மிக விலையுயர்ந்த கால்பந்து ஒப்பந்தம் மூலம் சவூதியின் அல்-நாசர் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது 41 வயதாகும் ரொனால்டோ, சவூதி மண்ணில் கால்பதித்த பிறகு தனது தலைமையின் கீழ் வெல்லும் முதல் சவூதி ப்ரோ லீக் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ள ரொனால்டோ, இந்தத் தொடர் முழுவதும் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணியை சாம்பியன் சிம்மாசனத்தில் அமர வைத்துள்ளார்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்:

அல்-நாசர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும், சமூக வலைத்தளங்களில் உலகெங்கிலும் உள்ள சிஆர்7 (CR7) ரசிகர்களும் “AL NASSR CHAMPIONS!” என்ற வாசகத்துடன் இந்த வரலாற்று வெற்றியைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version