சென்னை:

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித்துறையின் தொடர் தோல்விகளைக் கண்டித்து, ‘கரப்பான் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் மாணவர்கள் சார்பில் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தீவிர போராட்டத்திற்கு தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித் தனது வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அரசின் ஒடுக்குமுறைக்கு கடும் கண்டனம்:

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகளைக் கடுமையாக விமர்சித்து இயக்குநர் பா.ரஞ்சித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

“இது வெறும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையாகத் தொடங்கவில்லை; மாறாக, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாகவும் போராட்டமாகவும் மாறியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக உரிமையை காக்க ஒன்றிணைவோம்:

அமைதியான முறையில் ஜனநாயக வழியில் போராடுபவர்களின் குரல்வளையை நெறிக்காமல், மத்திய அரசும் கல்வித்துறையும் உரிய பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தச் சூழலில் மாணவர்களுக்கும், செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் போன்றோருக்கும் ஆதரவாகக் கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version