சென்னை:

தமிழக அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கடந்த மே 13-ஆம் தேதி முதல் மே 22-ஆம் தேதி (இன்று) வரை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் அவசர அவசரமாகக் கோரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட “குறுகிய கால டெண்டர்கள்” (Short-term Tenders) மொத்தமாக ரத்து செய்யப்பட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்குக் கடும் அறிவுறுத்தல்:

வழக்கமான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல், மிகக் குறுகிய கால அவகாசத்தில் டெண்டர்களை வெளியிட்டுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தலைமைச் செயலகம் தரப்பில் இருந்து கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் அனைத்து விதிகளையும் முறையாகப் பின்பற்றியே டெண்டர்கள் கோரப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சஸ்பெண்ட்:

முன்னதாக, அரசின் வழிகாட்டுதல்களை மீறி, விதிகளைப் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாகக் குறுகிய கால டெண்டர்களை வெளியிட்ட சில முக்கிய அரசு அதிகாரிகள் ஏற்கனவே அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசு வட்டாரங்களிலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version