சென்னை: “தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாய் சொல் வீரன் அல்ல, அவர் உண்மையான செயல் வீரன்” என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், தவெக உயர்மட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பத்திரிகையாளர் சந்திப்புகளை (Press Meet) நடத்துவதில்லை?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:

“நமது முதலமைச்சர் விஜய் விளம்பரத்தை விரும்புபவர் அல்ல. அவர் எப்போதும் வெற்றுப் பேச்சுக்களையோ, வீண் விளம்பரங்களையோ நம்புவதில்லை. ‘வாய் சொல் வீரன் அல்ல சி.எம் விஜய், அவர் ஒரு செயல் வீரன்’. ஊடகங்களின் முன் வந்து பேசுவதை விட, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைச் செயலாக்கிக் காட்டுவதிலேயே அவர் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.”

செயல்பாட்டு அரசியல்: மேலும், ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, தமிழகத்தின் அனைத்துத் துறைகளுக்கான 5 ஆண்டுக்கால நீண்டகால வளர்ச்சிப் பாதையை முதலமைச்சர் வகுத்துக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். “விளம்பர வெளிச்சத்தை விட, மக்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் போன்ற அத்தியாவசியச் சேவைகளை எவ்வளவு விரைவாக வழங்க முடியும் என்பதில் தான் முதலமைச்சரின் தினசரி கண்காணிப்பு உள்ளது” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

டெல்லியில் ஜூன் 11 அன்று நடைபெறவுள்ள ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளையும், மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவைகளையும் முதலமைச்சர் விஜய் வலுவாக எடுத்துரைக்க உள்ளார் என்றும், ஆட்சிப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் பணிகளில் அவர் காட்டி வரும் வேகம், எதிர்க்கட்சியினரின் வெற்று விமர்சனங்களுக்குத் தனது செயல்பாடுகள் மூலமாகவே பதிலளிப்பதாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version