தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட 3 மாதத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தின் உட்கட்டமைப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை 9-ஆம் தேதி கனிம வளங்கள் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களுக்குக் கனிமங்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. அரசின் இந்தத் தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 2 வார கால அவகாசத்திற்குள் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


