சென்னை: தமிழகப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக வெளிப்படையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:

குளிர்சாதன கிடங்கு சேமிப்பு சர்ச்சை:

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சந்தையில் ஒரு முட்டையின் விலை ₹3.70 ஆகக் குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை மொத்தமாக வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் (Cold Storage) சேமித்து வைத்துள்ளதாக அதிரவைக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறைந்த விலைக்கு முட்டைகளை பெருமளவில் வாங்கிச் சேமித்து வைத்து, அதனை ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்து லாபம் பார்க்க ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தரம் மற்றும் ஊட்டச்சத்து பாதிக்கும் அபாயம்:

முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்குகளில் பல மாதங்களாக வைக்கப்பட்டிருக்கும் முட்டைகள், பின்னர் தொலைதூர கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை நிச்சயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் பள்ளி மாணவர்களின் மதிய உணவில் பலமுறை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதை நாம் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தற்போதைய ஆட்சியிலும் அத்தகைய அவல நிலை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த வணிகப் பிரச்சனையோ, ஊழல் சார்ந்த விவகாரமோ மட்டுமல்ல; லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கை சார்ந்த முக்கிய விவகாரமாகும்.

அண்ணாமலை விடுத்துள்ள கோரிக்கை:

எனவே, பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகளின் சேமிப்பு காலம் எவ்வளவு? அவற்றின் தரப் பரிசோதனை முறைகள், போக்குவரத்து மற்றும் விநியோக நிலைமைகள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எவ்விதமான அலட்சியத்தையும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக் மாநில தலைவர் கே. அண்ணாமலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version