தமிழ்நாட்டில் போலி விபத்துகள் மற்றும் போலி இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் பல கோடி ரூபாய் நிதி முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு குழுக்களை (SIT) அமைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கோ டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில்:
- டிஎஸ்பி தலைமையில் குழு: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலி இன்சூரன்ஸ் வழக்கினை விசாரிக்கக் குற்றப்பிரிவு டிஎஸ்பி (DSP) அல்லது உதவி ஆணையர் (Assistant Commissioner) தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
- அரசு நிதி உதவி: இக்கண்காணிப்புக் குழுக்கள் தடையின்றி இயங்குவதற்குத் தேவையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு உடனடியாகக் வழங்கிட வேண்டும்.
- ஏடிஜிபி கண்காணிப்பு: மாநிலம் முழுவதும் செயல்படும் இச்சிறப்புப் படைகளின் பணிகளையும் விசாரணைகளையும் கூடுதல் டிஜிபி (ADGP) நிலையிலான அதிகாரி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- அதிகாரிகள் மீது நடவடிக்கை: இன்சூரன்ஸ் மோசடிகளைக் கண்டறியத் தவறினாலோ அல்லது அதற்குத் துணையாக இருந்தாலோ, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என்று நீதிபதி திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஏமாற்றி வந்த கும்பல்களுக்கு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரிய சாட்டையடியாக அமைந்துள்ளது.

