சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் (IDE) சார்பில் நடத்தப்படும் படிப்புகளுக்காகச் செயல்படும் அங்கீகரிக்கப்படாத மையங்கள் மற்றும் ஏஜென்சிகளை நம்பி மாணவர்கள் சேர வேண்டாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
“பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும், சேர்க்கை பெறவும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் முதன்மைச் சேர்க்கை மையங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்.
தங்களைத் தொலைதூரக் கல்வி மையங்கள் அல்லது முகவர்கள் (Agencies) எனக் கூறிக்கொண்டு இயங்கும் எந்தவொரு தனியார் அமைப்புகளுக்கும் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்படாத இடைத்தரகர்கள் அல்லது தனியார் மையங்கள் மூலம் சேர்க்கை பெற்றுப் பணத்தையோ, சான்றிதழ்களையோ இழக்கும் பட்சத்தில் அதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

