வாஷிங்டன்:
வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஈரான் நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், “கடந்த சில வாரங்களாக நடைபெற்ற மோதல்களில் சுமார் 100 வீரர்கள் வரை சிறு காயங்கள் மற்றும் அதிர்ச்சிகளுக்கு உள்ளாகியுள்ளனர்” என்று தெரிவித்தார். இருப்பினும், காயமடைந்த வீரர்களில் 96 சதவீதத்தினர் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கத் தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை முதன்முதலாக பென்டகன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ள செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

