பரவும் ஆடியோவால் பீதி – உண்மை என்ன? முழுமையான விளக்கம்!
சமீபகாலமாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், கூகுள் பே செயலியில் புதிதாக வந்துள்ள ‘Pocket Money’ என்ற ஐகானைக் கிளிக் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணமும் திருடப்பட்டுவிடும் என்று ஒரு நபர் எச்சரிக்கிறார். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என்பது உறுதியாகியுள்ளது.
என்ன இந்த ‘Pocket Money’ ஆப்ஷன்?
இது கூகுள் பே அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய பாதுகாப்பான அம்சம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்கும் செலவுப் பணத்தை (Pocket Money) டிஜிட்டல் முறையில் முறைப்படுத்துவதே இதன் நோக்கம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
- பணம் பகிர்தல்: உங்கள் வீட்டில் பள்ளி அல்லது கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணமாக ₹5,000) பாக்கெட் மணியாக செட் செய்யலாம்.
- கட்டுப்பாடுகள்: குழந்தைகள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்துதான் கழிக்கப்படும். ஆனால், நீங்கள் நிர்ணயித்த எல்லைக்கு மேல் அவர்களால் செலவு செய்ய முடியாது.
- ஒப்புதல் (Approval): ஒவ்வொரு முறை அவர்கள் பணம் செலுத்த முற்படும்போதும், உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும் வகையில் ‘Approve Every Payment’ ஆப்ஷனைப் பயன்படுத்தலாம். நீங்கள் ‘Accept’ கொடுத்தால் மட்டுமே பணம் செல்லும்.
- நேரடி கண்காணிப்பு: குழந்தைகள் எங்கு, எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை நீங்கள் உங்கள் மொபைலிலிருந்தே ‘Track’ செய்ய முடியும்.
முக்கிய விதிமுறைகள்:
- ஒரு பயனர் அதிகபட்சமாக 5 பேருக்கு மட்டுமே பாக்கெட் மணி செட் செய்ய முடியும்.
- பணம் பெறுபவரின் எண் உங்கள் போனில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அவரும் கூகுள் பே பயனராக இருக்க வேண்டும்.
- முதலில் நீங்கள் அனுப்பும் ‘Invite’-ஐ அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த வசதி தொடங்கும்.
Fact Check: வதந்திகளை நம்பாதீர்கள்!
வதந்தி: ‘Pocket Money’ ஐகானைத் தொட்டால் ஹேக்கர்கள் உங்கள் பணத்தைத் திருடி விடுவார்கள்.
உண்மை: இது கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான அம்சம். உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்களாகவே முன்வந்து அனுமதி அளித்தால் மட்டுமே பணம் செல்லும்.

