தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படும் புதிய நூல் ஒன்று வெளியாகிறது. மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரை சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக “சட்டசபையில் சமூக நீதி குரல்” என்ற நூல் வெளியிடப்படுகிறது.
15வது தமிழ்நாடு சட்டப்பேரவையில் 5 ஆண்டுகள் நடைபெற்ற 167 கூட்ட நாட்களில், 48 நாட்களில் 56 முறை உரையாற்றியுள்ளார். மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற அவை விவாதங்களில், 6 மணி நேரம் 36 நிமிடங்கள் பேசி அதிகமாக உரையாற்றிய உறுப்பினர்களில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார்.
அவரது உரைகளுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் 64 முறை பதிலளித்துள்ளனர். மேலும், இரண்டு முதலமைச்சர்கள் நான்கு முறை நேரடியாக பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவை நடைபெறும் போது 49 முறை பேரவைத் தலைவர் மற்றும் 28 முறை துணைத் தலைவர் குறுக்கிட்டு உரையை விரைவாக முடிக்க கேட்டுக்கொண்டது, உரைகளின் தீவிரத்தையும் விவர ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.
திருக்குர்ஆன், திருக்குறள் உள்ளிட்ட நூல்களின் கருத்துகள் முதல் BBC, CNN, அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் மேற்கோள்கள் வரை அவரது உரைகளில் இடம்பெற்றுள்ளன. 29 நாடுகள் மற்றும் 66 உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. 119 முறை சக உறுப்பினர்கள் மேசை தட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், சமூக நீதி, கல்வி, கலை, இலக்கியம், ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தைக் கொண்டாடும் அல்லது சவால் விடுக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள், கவன ஈர்ப்பு அறிவிப்புகள், கேள்வி-பதில்கள் என சட்டசபையின் அனைத்து அம்சங்களிலும் அவரது குரல் ஒலித்துள்ளது.
படங்களுடன், தேவையான அடிக்குறிப்புகளுடன், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், தமிழ் அரசியல் இலக்கிய உலகில் புதிய தரச்சான்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


