சென்னை:
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. ஜெகதீஸ்வரி புதிய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை லோக் பவனில் நடைபெற்ற எளிமையான விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
யார் இந்த ஜெகதீஸ்வரி?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் 40 வயதான கே. ஜெகதீஸ்வரி. இளங்கலை அறிவியல் (B.Sc.) பட்டதாரியான இவர், கட்சியின் தீவிரத் தொண்டராகவும், அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றுபவராகவும் அறியப்பட்டவர்.
புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, பெண் பிரதிநிதித்துவத்திற்கும், கட்சியின் உழைப்பாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
வாழ்த்துகளும் எதிர்பார்ப்பும்:
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கே. ஜெகதீஸ்வரிக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ஒதுக்கப்படவுள்ள முக்கியத் துறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
அமைச்சராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தன் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்றும், மக்கள் நலப்பணிகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வதே தனது முதல் கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.


