சென்னை: திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) காலமானதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காலமானார். இச்செய்தி அறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் இரங்கல் செய்தி: அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், “நண்பர் மற்றும் முன்னணித் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் அன்புத் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தமடைந்தேன்.

தன் பிள்ளையின் உயரிய வளர்ச்சிக்கு அரணாக விளங்கிய தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலையும் ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் தங்களின் ஆரம்பக் காலம் முதல் நல்ல நட்பைப் பகிர்ந்து வரும் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களும், இந்தத் துயரமான நேரத்தில் அஜித்தின் குடும்பத்தினருக்குச் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version