சென்னை:
தமிழ்நாடு அரசின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை உயர்த்தவும், நிதி நிலையை வலுப்படுத்தவும் 6 பேர் கொண்ட உயர் மட்ட ‘வருவாய் பெருக்கக் குழு’ (Revenue Augmentation Committee) அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக்குழு 3 மாதங்களுக்குள் தனது விரிவான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்
மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான மாண்டெக் சிங் அலுவாலியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்கள்:
- டாக்டர் கே.பி. கிருஷ்ணன் – பொருளாதார நிபுணர்
- அர்பிந்த் மோடி – வரிக் கொள்கை நிபுணர்
- நஜீப் ஷா (ஓய்வு) – மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர்
- எம்.ஏ. சித்திக், I.A.S. – கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு
- டாக்டர் எம். சுரேஷ் பாபு – இயக்குநர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS)
குழுவின் முக்கியப் பணிகள் & வரம்புகள்
- வருவாய் ஆதாரங்களை அதிகரித்தல்: வணிக வரி, பதிவுத் துறை, மதுபானக் கலால், மோட்டார் வாகனங்கள் மற்றும் சுரங்கத் துறை போன்ற முக்கியப் பிரிவுகளில் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுப்பது.
- வரி ஏய்ப்பு தடுப்பு: வரி வசூலில் உள்ள கசிவுகள், நிர்வாகத் திறமையின்மை மற்றும் வரி ஏய்ப்பைக் தடுக்க நவீன தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தல்.
- வரி அல்லாத வழிகள்: பொதுத்துறை நிறுவனங்களின் ஈவுத்தொகை (Dividends), அரசு நிலம் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல் (Asset Monetisation) மற்றும் பயனர் கட்டணங்களை முறைப்படுத்துதல்.
- மதுபானக் கொள்கை மாற்றம்: மதுபானங்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் மூலம் மாநில வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.
குழு அமைக்கப்பட்டதன் பின்னணி
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விகிதம் குறைந்துள்ளதாகவும், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கசிவுகளால் கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்தது. மாநிலத்தின் கடன் சுமையைக் குறைத்து நிதிச் சுயசார்பை எட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


