புதுடெல்லி:
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும் டெல்லியில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் கவலைகள் நியாயமானவை என்றும், அவர்களின் கோரிக்கைகளை அடக்குமுறையைக் கையாளாமல் பரிவோடு அணுக வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாணவர்கள் தலைநகர் டெல்லி வீதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது தமக்கு பெரும் வேதனையை அளிப்பதாக அவர் தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
- நியாயமான கவலைகள்:மாணவர்கள் எழுப்பும் கேள்விகளும், தேர்வு முறையின் மீதான அவர்களின் சந்தேகங்களும் நியாயமானவை. இதை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனையாகக் கருதி பலப்பிரயோகம் செய்யக் கூடாது.
- காவல்துறையின் அடக்குமுறைக்கு கண்டனம்:போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, குறிப்பாக பெண் மாணவிகளை காவல்துறையினர் கையாண்ட விதம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதுபோன்ற அடக்குமுறைகள் இளைஞர்களை அரசிடமிருந்து விலகச் செய்துவிடும்.
- நிரந்தரத் தீர்வு தேவை: மாணவர்களின் கோரிக்கைகளுக்குப் பரிவோடு செவிசாய்த்து, தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து நம்பிக்கையான நிரந்தரத் தீர்வை அரசு காண வேண்டும்.


