சென்னை: தமிழக மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றிய பிரபல மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப், தனது பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி நெகிழ்ச்சியான அனுபவப் பகிர்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“வியப்பும்… தயக்கமும்…”:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தன்னைத் திட்டக்குழு உறுப்பினராக நியமித்தபோது ஏற்பட்ட மலைப்பை அவர் நினைவுகூர்ந்துள்ளார். “எந்தவிதப் பின்புலமும் இல்லாத என்னைத் தலைவரே தேர்ந்தெடுத்தார். ஒரு சிறிய குருவியின் தலையில் பெரிய மலையை வைத்தது போல உணர்ந்தேன். அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று அன்றே உறுதி எடுத்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதர்சனத்தைச் சொல்லுங்கள் – முதல்வர் அறிவுரை:

முதல் கூட்டத்திலேயே, “என்னை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய வேண்டாம்; திட்டங்களில் உள்ள நிறை குறைகளை அப்படியே சொன்னால்தான் எங்களால் சரி செய்ய முடியும்” என்று முதல்வர் கூறியது தனக்குப் பெரும் ஊக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களிடம் கள ஆய்வு மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Data Interpretation) குறித்துக் கற்றுக்கொண்டது அதிகம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியக் கொள்கை வரைவுகள்:

திட்டக்குழுவில் பணியாற்றிய காலத்தில் தான் கவனம் செலுத்திய முக்கியத் துறைகள் குறித்து அவர் பட்டியலிட்டுள்ளார்:

  • சுகாதாரம்: இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்களுடன் இணைந்து சுகாதாரக் கொள்கை வரைவு தயாரிப்பு.
  • மக்க நலத் திட்டங்கள்: காலை சிற்றுண்டித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், பள்ளிச் சிறுவர்கள் வளர்ச்சி ஆய்வு.
  • கள ஆய்வு: பின்தங்கிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சாலை விபத்துகள், சத்துணவு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) போன்ற துறைகளில் விரிவான ஆய்வு அறிக்கைகள் தயாரிப்பு.

களத்தில் ஒரு படிப்பு:

“மாணவப் பருவத்தில் 5 ஆண்டுகள் மருத்துவம் படித்தேன். கடந்த 5 ஆண்டுகளில் களத்தில் ‘சமூக மருத்துவம்’ படித்தேன்” என்று தனது அனுபவத்தைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். தனது அறிக்கைகளை முதல்வர் சமர்ப்பிக்கும்போது அவர் கேட்ட கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் ஒரு இனிய அனுபவம் என்று கூறியுள்ளார்.

புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், தனக்கு இந்த வாய்ப்பளித்த முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் திட்டக்குழு அலுவலர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, மனநிறைவுடன் விடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தனது வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version