திருச்சி: 127 பயணிகளுடன் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்த நிலையில் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை 2 மணிநேரம் சுற்றி பத்திரமாக தரையிறங்கியது. இந்த திக்திக் சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

திருச்சியில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 6E 1007 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 127 பயணிகள் பயணம் செய்தனர். 4 மணிநேரத்தில் இந்த விமானம் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதே விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும்.

ஆனால் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை மேற்கொண்டு இயக்கினால் ஆபத்து நேரிடலாம் என்று பைலட் நினைத்தனர். இதனால் உடனடியாக அவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து விமானத்தை பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் விமானம் அப்போது தான் புறப்பட்டது என்பதால் அதில் நிறைய எரிபொருள் இருந்தது. அதிகமான எரிபொருள் இருக்கும்போது விமானத்தை தரையிறக்குவது ஆபத்துக்கு வழிவகுக்கலாம். இதனால் விமானத்தின் எரிபொருளை குறைத்து தரையிறக்க அறிவுரை வழங்கப்பட்டது. இதனால் பைலட்டுகள் 2 மணிநேரமாக விமானத்தை வானில் வட்டமடிக்க செய்தனர்.
சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக விமானம் வட்டமடித்த பிறகு இரவு 8.55 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. இதுபற்றி விமானத நிலைய இயக்குநர் ஜி கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”இண்டிகோ விமானத்தில் பயணித்த 127 பயணிகளுக்கும் சனிக்கிழமை அதிகாலையில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணிகள் பத்திரமாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version