புதுடெல்லி: மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) வழிகாட்டுதலின்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கிப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த மாபெரும் கல்வி சீர்திருத்தத்தின்படி, மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் மொத்தம் மூன்று மொழிகளைக் (R1, R2, R3) கற்க வேண்டும். இதில் மிக முக்கிய விதியாக, தேர்ந்தெடுக்கப்படும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் இந்தியத் தாய்மொழிகளாக (Native Indian Languages) இருக்க வேண்டும் என்று வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. வெளிநாட்டு மொழியைக் கற்க விரும்பும் மாணவர்கள், அதை 3-ஆவது மொழியாகவோ அல்லது 4-ஆவது கூடுதல் பாடமாகவோ மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

தேர்வு அழுத்தத்தைக் குறைக்கப் புதிய வழிமுறை: அதே நேரத்தில், கூடுதல் மொழியால் மாணவர்களுக்குக் கல்விச் சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க சிபிஎஸ்இ ஒரு முக்கியச் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த 3-ஆவது மொழிக்கு (R3) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் (Board Exam) வெளிவாரித் தேர்வுகள் எதுவும் நடத்தப்பட மாட்டாது.

அதற்குப் பதிலாக, பள்ளிகளே அந்தந்த மொழிகளுக்கான உள்மதிப்பீட்டை (Internal Assessment) நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு மதிப்பெண்கள் மாணவர்களின் இறுதி சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாகக் குறிப்பிடப்படும். மேலும், 3-ஆவது மொழித் தேர்ச்சி காரணமாக எந்தவொரு மாணவரும் பொதுத்தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றும் வாரியம் உறுதியளித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இதிலிருந்து தகுந்த விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version